Wednesday, December 31, 2014

சிக்கன் ப்ரை / Chicken Fry

பரிமாறும்  அளவு  - 2 நபருக்கு

தேவையான  பொருள்கள் -
  1. சிக்கன் - 1/4 கிலோ 
  2. இஞ்சி  பூண்டு  விழுது  - 1 தேக்கரண்டி 
  3. தயிர்  -  50 கிராம் 
  4. லெமன் ஜூஸ்  -  2 மேஜைக்கரண்டி 
  5. சிக்கன் 65 பவுடர் - 1  மேஜைக்கரண்டி 
  6. மல்லித்  தழை - சிறிது 
  7. எண்ணெய் - 4 மேஜைக்கரண்டி
  8. உப்பு  - தேவையான  அளவு 
செய்முறை -
  1. முதலில் சிக்கனை நன்கு கழுவி வைக்கவும். கழுவிய சிக்கன் மீது இஞ்சி  பூண்டு விழுது , தயிர், லெமன் ஜூஸ், சிக்கன் 65 பவுடர், உப்பு  எல்லாவற்றையும் கலந்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
                                                                       
  2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை போடவும்.
  3. அடுப்பை மிதமான சூட்டில் வைத்து சிக்கன் வேகும் வரை கிளறி  விடவும். சிக்கன் வேகும் போது தண்ணிர் விடும்.                                                   
  4. சிக்கன் வெந்து தண்ணிர் நன்றாக வற்றிய பிறகு அடுப்பை  சிறிது கூட்டி கொள்ளவும்.             
  5. இரு புறமும் நன்றாக சிவக்கும் வரை கிளறி அடுப்பை அணைக்கவும்.  
  6. மல்லித் தழையை தூவி பரிமாறவும். சுவையான சிக்கன் ப்ரை ரெடி. 

Friday, December 12, 2014

கேரட் கூட்டு / Carrot Kootu

பரிமாறும் அளவு - 3 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. கேரட் - 2
  2. துவரம்  பருப்பு - 50 கிராம் 
  3. சாம்பார்  பொடி - 2 மேஜைக்கரண்டி 
  4. காயத் தூள் - 1/4 தேக்கரண்டி 
  5. மஞ்சள்  தூள் - 1/2 தேக்கரண்டி 
  6. உப்பு - தேவையான அளவு 

அரைக்க -
  1. தேங்காய்  துருவல் - 1/4 கப் 
  2. தக்காளி - 1 
  3. சின்ன வெங்காயம் - 5
                                                                                     
தாளிக்க -
  1. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
  2. கடுகு - 1/2 தேக்கரண்டி 
  3. உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி 
  4. வெங்காயம் - 1/4 பங்கு 
  5. கறிவேப்பிலை - சிறிது 
செய்முறை -
  1. முதலில் கேரட்டை சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும். துவரம் பருப்புடன் காயம் சேர்த்து  குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும்.  தேங்காய் துருவல், தக்காளி, வெங்காயம் மூன்றையும் மிக்ஸ்சியில்  அரைத்துக்  கொள்ளவும்.                                                     

  2. அடுப்பில் கடாயை வைத்து கேரட் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி  வேக விடவும். கேரட் வெந்ததும் அதனுடன் உப்பு,மற்றும் சாம்பார் பொடி  சேர்த்து கொதிக்க விடவும்.                                                                                                                         

  3. மசாலா வாடை அடங்கியதும் அரைத்து வைத்துள்ள தேங்காய கலவை, மற்றும் அவித்து வைத்துள்ள பருப்பு இரண்டையும் சேர்த்து  5 நிமிடம்  கொதிக்க விடவும்.                                     
  4.  தண்ணீர் தேவைப் பட்டால் சிறிது சேர்த்துக்கொள்ளவும். கூட்டு கெட்டியானதும் உப்பு சரி பார்த்து பாத்திரத்திற்கு மாற்றி விடவும்.        
  5. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம்  பொன்னிறமானதும் எடுத்து கூட்டில் சேர்த்து கலக்கி விடவும். சுவையான கேரட் கூட்டு  ரெடி.

Wednesday, November 26, 2014

அரைக்கீரை பொரியல் / Araikeerai Poriyal


பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. அரைக்கீரை - 1 கட்டு 
  2. துவரம் பருப்பு - 2 மேஜைக்கரண்டி 
  3. தேங்காய் துருவல் - 3 மேஜைக்கரண்டி 
  4. உப்பு - தேவையான அளவு 
தாளிக்க -
  1. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
  2. கடுகு - 1/2 தேக்கரண்டி 
  3. உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி 
  4. பச்சை மிளகாய் - 2
  5. கறிவேப்பிலை - சிறிது 
செய்முறை -
  1. முதலில் கீரையை ஆய்ந்து தண்ணீரில் நன்றாக கழுவி பொடிதாக நறுக்கி வைக்கவும். வெங்காயம், பச்சை மிளகாய் இரண்டையும் நீளவாக்கில் வெட்டி வைக்கவும். 
  2. துவரம் பருப்பை 15 நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து தண்ணீரை வடித்து   வைத்துக் கொள்ளவும்.                                                      
  3. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு போட்டு தாளிக்கவும்.
  4. கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  5. வெங்காயம் பொன்னிறமானதும் கீரை மற்றும் பருப்பை சேர்த்து போட்டு கிளறவும்.                                                       
  6. பிறகு உப்பு சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து கீரை வேகும் வரை கிளறவும்.                                                                                      
  7. இறுதியில் தேங்காய் துருவல் சேர்த்து உப்பு சரி பார்த்து அடுப்பை அணைக்கவும். சுவையான அரைக்கீரை பொரியல் ரெடி. 

Saturday, November 15, 2014

கேரட் சட்னி / Carrot Chutney

பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. கேரட் - 2
  2. சின்ன வெங்காயம் - 10
  3. தக்காளி - 1
  4. மிளகாய் வத்தல் - 2
  5. கடலைப்பருப்பு - 1 மேஜைக்கரண்டி 
  6. காயத்தூள் - சிறிது 
  7. உப்பு - தேவையான அளவு                          
தாளிக்க -
  1. நல்லெண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
  2. கடுகு - 1/2 தேக்கரண்டி 
  3. உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி 
  4. கறிவேப்பிலை - சிறிது 
செய்முறை -
  1. முதலில் கேரட், வெங்காயம், தக்காளி மூன்றையும் பொடிதாக வெட்டி வைக்கவும். 
  2. அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் கடலைப்பருப்பை போட்டு நன்கு வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.                                                   

  3. பிறகு அதே கடாயில் ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் கேரட்டை போட்டு இரண்டு நிமிடம் வரை வதக்கி  வேறு பாத்திரத்தில் மாற்றி வைக்கவும். 
  4. அடுத்து ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் மிளகாய் வத்தல் போடவும். பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கவும். 
  5. வெங்காயம் பொன்னிறமானதும் தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி சுருள வதங்கியதும் காயத்தூள், உப்பு சேர்த்து கிளறி சிறிது நேரம் ஆறவிடவும்.

  6. ஆறிய பிறகு மிக்ஸ்சியில் வதக்கிய அணைத்து பொருட்களையும் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.                                                
  7. அடுப்பில் கடாயை வைத்து மீதமுள்ள ஒரு மேஜைக்கரண்டி நல்லெண்ணைய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை சேர்த்து சட்னியில் ஊற்றி கலக்கி விடவும். சுவையான கேரட் சட்னி ரெடி. இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.                                  

Tuesday, November 4, 2014

வெங்காய குருமா / Onion kurma

                           
பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. பெரிய வெங்காயம் - 2
  2. தக்காளி - 1
  3. மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி 
  4. மல்லித்தூள் - 2 மேஜைக்கரண்டி 
  5. சீரகத்தூள் - 1 தேக்கரண்டி 
  6. கறிமசாலாத்தூள் - 1 தேக்கரண்டி 
  7. உப்பு - தேவையான அளவு 
  8. கறிவேப்பிலை - சிறிது 
  9. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி                 
அரைக்க -
  1. தேங்காய் துருவல் - 4 மேஜைக்கரண்டி 
  2. முந்திரிப்பருப்பு - 4
  3. ஏலக்காய் - 2
செய்முறை -
  1. முதலில் வெங்காயம் தக்காளி இரண்டையும் பொடிதாக நறுக்கி வைக்கவும். தேங்காய் துருவல், முந்திரிப்பருப்பு, ஏலக்காய் எல்லாவற்றையும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸ்சியில் அரைத்துக் கொள்ளவும்.                                                                    

  2. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி இரண்டையும் சேர்த்து நல்ல பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
  3. பிறகு மிளகாய் தூள், மல்லித்தூள், சீரகத்தூள், கறிமசாலாத்தூள், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து ஒரு நிமிடம் கிளறவும். பிறகு அதனுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கிளறி விடவும்.
  4. மசாலா வாடை அடங்கியதும் அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை சேர்த்து குருமா கெட்டியாகும் வரை அடுப்பில் வைத்திருந்து கெட்டியானதும் அடுப்பை அணைக்கவும். சுவையான வெங்காய குருமா ரெடி. பூரி, சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடலாம்.        

Tuesday, October 28, 2014

வாழ்க்கையின் சின்னசின்ன சந்தோஷங்கள்

                           

இன்றைய காலகட்ட நெருக்கடியான வாழ்க்கையிலும் சின்னசின்ன சந்தோஷங்கள் வாழ்க்கைக்கு சுவை சேர்க்கிறது. என்னை மகிழ்ச்சிப்படுத்தும் சின்னசின்ன சந்தோஷமான விஷயங்களை உங்கள் எல்லோரிடமும் பகிர்ந்து கொள்கிறேன்.

வீட்டிற்கு வரும் விருந்தாளிகள் நீ உன் சமையல் அறையை நல்ல சுத்தமாக வைத்திருக்கிறாய் என்று பாராட்டும் போது என் உழைப்புக்கான மகிழ்ச்சி!

இட்லி அல்லது வடைக்கு மாவு அரைத்து எடுத்து கிரைண்டரை சுத்தப்படுத்திய பிறகு கரண்ட் கட் ஆகும் போது மாவு அரைத்து முடித்த சந்தோஷத்தில் ஏற்படும் ஒரு சின்ன மகிழ்ச்சி!

பண்டிகை நாட்களில் வீட்டை அலங்கரித்து முடிக்கையில் தோன்றும் பெருமித மகிழ்ச்சி!

மார்கெட் சென்று தேவையான காய்கறிகளை வாங்கி முடித்து வெளியில் வந்தவுடன் சாலை ஓரத்தில் இருக்கும் கரும்புச்சாறு வாங்கி பருகும் போது  உடலும், உள்ளமும் பெற்றிடும் மகிழ்ச்சி!

விருந்தினர்கள் வரும் போது பதற்றத்துடன் செய்த குழம்பு வகைகள், கூட்டு வகைகள் எல்லாம் நல்ல ருசியாக அமைந்து விடுவது எல்லையில்லா மகிழ்ச்சி!

வேலை முடிந்து களைப்பாக இருக்கும் போது மகள் டீ தயாரித்து தரும் போது அளவில்லா மகிழ்ச்சி! (சுவையுடன் பாசமும் அதிகமாக இருக்கும்)

நமக்கு நாமே பிளவுஸ் தைத்து முடித்தவுடன் கரெக்ட் ஆக இருக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சி!

டி. வி யில் பழைய பாடல்கள் கேட்கும் போது ஏற்படும் மகிழ்ச்சி!

என்னுடைய பேரன் வீடியோ சாட்டில் வந்து என்னுடன் பேசும் போதும் சாரதா ஆச்சி என்று எழுதி காண்பித்ததை நினைத்து அளவில்லா மகிழ்ச்சி!

என்னுடைய பேத்தி என்னுடன் விளையாடியதும் என்னை ஆச்சி என்று அழைத்து மழலையில் பேசியதையும் நினைத்து அளவில்லா மகிழ்ச்சி!

இப்படியாக நாம் வாழ்க்கையில் கிடைக்கின்ற சின்னசின்ன சந்தோஷங்களை நினைத்து நம்முடைய வாழ்க்கையை சந்தோஷமாக வாழ பழகிக் கொள்ளவேண்டும்.

நன்றி
சாரதா

Friday, October 17, 2014

தீபாவளி வாழ்த்துக்கள்

                             

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் மாதம் 22 ஆம் தேதி வர இருக்கிறது. தீபாவளி பண்டிகை தீப ஒளி திருநாளாக கொண்டாடப்படுகிறது.

இந்த நல்ல நாளில் மக்கள் அனைவரும் புத்தாடை அணிந்து வீட்டில் இனிப்பு பண்டங்கள் செய்து அதை உறவினர்களுக்கும், சினேகிதிகளுக்கும் கொடுத்து மகிழ்வார்கள். தீபாவளிக்கு முந்தைய நாளே சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மத்தாப்புகள் கொளுத்தியும், பட்டாசுகள் வெடித்தும் மகிழ்வார்கள். பார்ப்பதற்கு வண்ணமயமாக காட்சி அளிக்கும்.

இந்த நல்ல நாளில் எல்லோரும் சந்தோஷமாக கொண்டாட உங்கள் அனைவருக்கும் என்னுடைய தீபாவளி நல்வாழ்த்துக்கள் !!!

தீபாவளி ஸ்பெஷல் -
  1. அதிரசம் 
  2. தேன்குழல் முறுக்கு 
  3. சீடை 
  4. சுசியம் 
  5. முந்திரிக் கொத்து 
  6. மைதா போண்டா 
  7. மைதா பிஸ்கட் 
  8. பொட்டுக்கடலை லட்டு 
  9. ரவா லட்டு 
  10. ரவா கேசரி 
  11. ஓட்ஸ் லட்டு 
  12. பாசிப்பருப்பு உருண்டை 
  13. கோதுமை அப்பம் 
  14. மெது பக்கோடா 
  15. முள்ளு முறுக்கு 
  16. வாழைக்காய் பஜ்ஜி 
  17. உளுந்த வடை 
  18. பட்டாணிப்பருப்பு வடை 
  19. நெய்க்கடலை 
  20. கேரட் அல்வா
  21. காராப் பூந்தி

காராப் பூந்தி / Kara Boondi

தேவையான பொருள்கள் -
  1. கடலைப்பருப்பு - 200 கிராம்
  2. இட்லி அரிசி - 50 கிராம் 
  3. நிலக்கடலை - 3 மேஜைக்கரண்டி 
  4. மிளகாய் தூள் - 1 மேஜைக்கரண்டி 
  5. காயத்தூள் - சிறிது 
  6. கறிவேப்பிலை - சிறிது 
  7. உப்பு - தேவையான அளவு 
  8. எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை -
  1. முதலில் கடலைப்பருப்பு, அரிசி இரண்டையும் தண்ணீரில் 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. ஊறிய பின் பருப்பு, அரிசியுடன் மிளகாய் தூள், காயத்தூள், உப்பு சேர்த்து கிரைண்டரில் இட்லி மாவு பதத்தை விட கொஞ்சம் தளர்வாக அரைத்துக் கொள்ளவும். 5 நிமிடங்களில் அரைபட்டு விடும்.                                                                                      
  3. நிலக்கடலையை வறுத்து தோலுரித்துக் கொள்ளவும்.
  4. அடுப்பில் கடாயை வைத்து எண்ணைய் ஊற்றி சூடானதும் எண்ணெயின் மேல் ஒரு பெரிய கண் கரண்டியை வைத்து ஒரு மேஜைக்கரண்டி மாவு எடுத்து அதில் ஊற்றி வேகமாக தேய்த்து கடாய் கொள்ளும் அளவுக்கு போட்டு மிதமான சூட்டில் வைத்து வேக விடவும்.
  5. பூந்தி நன்கு சிவந்ததும் எடுத்து விடவும். மீதமுள்ள எல்லா மாவையும் இதே முறையில் போட்டு வெந்தவுடன் எடுத்து டிஸ்யு பேப்பரில் பரப்பி ஆற விடவும்.
  6. சூடாக இருக்கும் எண்ணையில் கறிவேப்பிலையை வறுத்து காரப்பூந்தியுடன் சேர்க்கவும். பிறகு வறுத்து வைத்துள்ள நிலக்கடலையும் சேர்த்து கலந்து விடவும்.
  7. எண்ணெய் நன்கு உறிஞ்சியவுடன் காற்றுப்புகாத பாட்டிலில் போட்டு வைக்கவும். சுவையான காராப் பூந்தி ரெடி.

Wednesday, October 8, 2014

பாளை முப்பிடாதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

                 

முப்பிடாதி அம்மன் கோவில் பாளையங்கோட்டையில் உள்ள கோட்டூர் சாலையில் உள்ளது. இந்த கோவில் மிகவும் பழமை வாய்ந்தது. எனவே கோவிலை புதுப்பிக்க நினைத்து இரண்டு ஆண்டுகளாக வேலை நடந்து வந்தது. பக்தர்கள் அணைவரும் கொடுத்த நன்கொடையால் கோவில் புதுப்பிக்கும் பணிகளும் கோபுர வேலைப்பாடும் நல்லபடியாக முடிந்து 10.9.2014 அன்று முப்பிடாதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

                                              முப்பிடாதி அம்மன் கோவிலின் தோற்றம்
                             

6.9.2014 முதல் 9.9.2014 வரையாக வழிபாடு நடத்துவதற்க்கு ஏற்பாடுகள் செயப்பட்டிருந்தது. பிறகு யாக வழிபாடு நல்ல முறையில் நடந்ததது.


கும்பாபிஷேகத்திற்கு முந்தைய நாள் முப்பிடாதி அம்மனின் மூத்த சகோதரியான பேராச்சி அம்மனின் பாதத்தில் தண்ணீர் குடத்தை வைத்து வழிபட்டு வந்த தண்ணீரால் முப்பிடாதி அம்மனை நீராட்டினார்கள். பொது மக்கள் அணைவரும் வீட்டிலிருந்து தண்ணீர் எடுத்து வந்து பிள்ளையாரை நீராட்டினார்கள். அன்று மாலையில் யானை ஊர்வலம் வீதி முழுவதும் உலா வந்தது.

கும்பாபிஷேகம் அன்று காலை 5 மணிக்கு மங்கள இசை நடந்தது. பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
                                        
காலை 6 மணிக்கு 4ம் கால யாக பூஜைகள் ஆரம்பமானது. 7 மணிக்கு அஸ்தர ஹோமம் நடந்தது. 9 மணி முதல் 10.30 மணிக்குள் கும்பம் எழுந்தருளல், விமான கோபுர கும்பாபிஷேகம் நடைபெற்றது. 12 மணிக்கு மகா அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. 12 மணிக்கு மேல் கோவிலில் 15000 பேருக்கு அன்னதானம் நடைபெற்றது. மாலை 7 மணிக்கு அம்பாள் சப்பரம் வீதி உலா வந்தது.

இப்படியாக பாளை முப்பிடாதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் இனிதே நடந்து முடிந்தது.

முப்பிடாதி அம்மன் கோவில் எனது அம்மா வீட்டிற்கு அருகில் உள்ளது. நான் கும்பாபிஷேகத்திக்கு முந்தைய நாளே சென்று விட்டேன். அன்று வெளியூரிலிருக்கும் என்னுடைய பழைய தோழிகள் நிறைய பேர் வந்திருந்தார்கள். அன்று எல்லோரும் ஒன்றாக சேர்ந்து மிகவும் சந்தோஷமாக இருந்தோம். எங்கள் எல்லோருக்கும் அம்மனின் அருளும் கிடைத்தது.

நன்றி
சாரதா
Related Posts Plugin for WordPress, Blogger...